14 January 2010

தெளிவான முடிவு 20

சேகர் ,ஸ்வேதா வேகமாக சென்றதை பார்த்து மனமுடைந்தான்.எப்படியும் அவளுக்கும் நம்மை பிடித்திருக்கும் என்று உறுதியாக நினைத்தவனுக்கு அதிர்ச்சி தான்.ஏதாவது பதில் சொல்லி இருந்தாலோ,அல்லது இவனை திட்டி இருந்தாலோ சேகருக்கு ஒரு முடிவு தெரிந்திருக்கும் .ஆனால் அது எதுவும் நடக்கவில்லை .
ஹோடெலில் நடந்ததை சிலர் வேடிக்கை பார்க்க ,சேகர் பில் கட்டி விட்டு அங்கிருந்து சென்றான் . சென்டர் வாசலுக்கு வரும் போது ,ஸ்வேதா பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்வது தெரிந்தது ..நாம போய் ஸ்வேதாகிட்ட பேசலாமா ?இல்லை இல்லை நாளை வரை பொறுத்திருப்போம் என்று எண்ணி சென்டர் உள்ளே சென்றான்.பஸ்சில் அமர்ந்த ஸ்வேதாவுக்கு ஒரே பதட்டம் ....குழப்பமான மனதுடனே வீடு சென்றாள். " சேகர் இன்று என்னிடம் இப்படி சொல்லிவிட்டார் .?நான் அன்பாக பழகியதை இப்படி தவறாக நினைத்து விட்டாரே ? பரிசு கொடுத்ததை எல்லாம் இப்படி பெரிதாக எடுத்து கொண்டாரே ?என்று பல கேள்விகள் எழுந்தது அவளுக்கு .
அவர் இருக்கும் இடமே தெரியாது , யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்று சென்டர்ல உள்ள அனைவரும் சேகர் பற்றி கூறியது நினைவில் வந்தது ஸ்வேதாவுக்கு ."ஒரு வேளை நான் தான் அவரின் இன்றைய மாற்றத்திற்கு காரணமோ ?நான் தான் அவரிடம் நெருங்கி பழகி அவரை இவ்வாறு பேச வைத்து விட்டேனோ ? என்று தன்னையே நொந்து கொண்டாள்.
இனி நான் எப்படி செனட்டர் செல்ல முடியும்,சேகர் முகத்தில் எவ்வாறு முழிப்பேன் ?அவருக்கு என்ன முடிவு சொல்லுவேன் ?என்று கலக்கத்துடன் இருந்தாள் .யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது .......உடனே தன் நெருங்கிய தோழி சப்னா நினைவுக்கு வர ,அவளுடைய நம்பரை தேடி பிடித்து கால் செய்தாள்.சப்னா ,ஸ்வேதாவின் நெருங்கிய தோழி ,காதல் திருமணம் செய்து கொண்டு திருச்சியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள் .
ஸ்வேதாவும் சப்னாவும் சிறு வயது முதலே நல்ல தோழிகள் .ஸ்வேதா சென்னை வரும் போது , சப்னாவிடம் சொல்லி விட்டு வந்தாள்.அதன் பிறகு இவள் அவளை தொடர்பு கொள்ளவே இல்லை .
ஸ்வேதா,"சப்னா நான் ஸ்வேதா பேசறேன் எப்படி இருக்க ?" என்று தொடங்க
சப்னா,"என்னடி என் ஞாபகம் இப்ப தான் வந்துச்சா ? வேளை கிடைச்சுதா ?எப்படி இருக்க ?அக்கா,மாமா ,அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா ? என்று தொடர்ந்து பேசி கொண்டிருந்தாள்.ஸ்வேதா குறிக்கிட்டு ,"எல்லாரும் நல்ல இருக்காங்க ...சப்னா என்ன மன்னிச்சுக்க டி ,இங்க நான் பிஸியா இருந்ததால தான் உன்கிட்ட பேச முடியல ...இப்போ எனக்கு நீ ஒரு உதவி செய்யணும் " என்று தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அனைத்தையும் சொன்னாள். சப்னாவின் பதில் அவளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

தெளிவான முடிவு 19

ஸ்வேதா இது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் . சேகர் ஸ்வேதாவின் முகத்தை பார்க்காமல் , தலை குனிந்து அவன் மனதில் உள்ளதை கொட்ட ஆரம்பித்தான் ." ஸ்வேதா நீ சென்டர் க்கு வந்து சேர்ந்த புதிதில் என்னிடம் உன்னை பற்றி சொல்லும் போது உன் வெகுளித்தனம் எனக்கு பிடித்தது . ஆங்கிலம் சரியாக பேச கற்று கொள்ள வேண்டும் என்று என் உதவியை நாடி வந்த போது உன் தைரியம் எனக்கு பிடித்தது ,முப்பதே நாட்களில் ஆங்கிலத்தை சரளமாக பேசி எல்லோரையும் அசத்திய போது உன் திறமை எனக்கு பிடித்தது,நீ எனக்கு வாட்ச் பரிசாக தந்த போது உன் அன்பு எனக்கு பிடித்தது , உன் குடும்ப விசயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட போது உன் நட்பு எனக்கு பிடித்தது.நீ எனக்கு ஒரு நல்ல தோழி என்று நினைத்திருந்தேன்.

ஆனால், என்று உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் என்று கேள்விபட்டேனோ அன்று என் மனதில் சஞ்சலம் ஏற்பட ஆரம்பித்தது . அந்த இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை .உன்னை மற்றொருவருடன் திருமண கோலத்தில் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .அப்போது தான் நீ எனக்கு நல்ல தோழி மட்டும் அல்ல ,என்னுடைய வாழ்கை துணைவியும் நீ தான் என்று உணர்ந்தேன்.

என்னுடைய உணர்வுகளுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நினைப்பில் தான் உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டேன் , உன்னுடைய பதில் என்னுடைய வாழ்வுக்கு தெளிவான முடிவாக இருக்கும் ." என்று சேகர் சொல்லி முடித்து நிமிர்ந்து ஸ்வேதாவை பார்த்தபோது ,அவள் கலங்கிய கண்களுடன் வாடிய முகத்துடன் ஒன்றும் பேசாமல் வேகமாக சென்று விட்டாள்.